Daily ThanthiMaalaimalarThanthi TVDTNext
Articles
ஏப்ரல் 23, 10:00 am6 min read

குமரி மாவட்டம் உருவாக காரணமான மார்ஷல் நேசமணி

குமரி மாவட்டம் உருவாக காரணமான மார்ஷல் நேசமணி

Advertisement

இன்றைய குமரி மாவட்டப் பகுதிகள் ஒரு காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு அங்கமாக இருந்தது. நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகுதான் குமரி மாவட்டம் 1956-ம் ஆண்டு தாய்தமிழகத்துடன் இணைந்தது. இத்தகைய போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் மார்ஷல் நேசமணி.

இந்தியாவின் ஒரு எல்லையாகவும், தமிழகத்தின் தென்கோடி மாவட்டமாகவும் விளங்குவது கன்னியாகுமரி. இன்றைய குமரி மாவட்டப் பகுதிகள் ஒரு காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு அங்கமாக இருந்தது. இந்த குமரி மாவட்டம் எளிதாக தமிழகத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்படவில்லை. நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகுதான் குமரி மாவட்டம் 1956-ம் ஆண்டு தாய்தமிழகத்துடன் இணைந்தது.

இத்தகைய போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் மார்ஷல் நேசமணி. இவரை குமரி மாவட்ட மக்கள் 'குமரித்தந்தை', 'பெரியவர்', 'தென் எல்லைக் காவலர்', 'குமரி மாவட்ட சிற்பி' என்று அன்போடு அழைக்கிறார்கள். குமரி மாவட்டம் தாய்தமிழகத்தோடு இணையவும், சமூக நீதிக்காகவும் போராடிய போராட்டங்கள் குமரி மாவட்டத்தின் வரலாறாக இருந்து வருகிறது.

இவ்வாறு புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவராக விளங்கும் மார்ஷல் நேசமணி 1895-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி நட்டாலம் நேசர்புரம் கிராமத்தில் அப்பல்லோஸ்- ஞானம்மாள் தம்பதியருக்கு 2-வது மகனாகப் பிறந்தார். இவர் தனது ஆரம்ப கல்வியை பள்ளியாடி மற்றும் மார்த்தாண்டத்திலும், உயர்நிலைக் கல்வியை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவப் பள்ளியிலும் பயின்றார். இண்டர்மீடியட் படிப்பை திருநெல்வேலி சி.எம்.எஸ். கல்லூரியில் தொடர்ந்தார். பின்னர் இன்றைய கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள மன்னர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

Advertisement

வக்கீலாக...

நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தொண்டாற்ற சட்டக்கல்வி மிகவும் அவசியம் என்று உணர்ந்த அவர் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் சட்டக்கல்வி பயின்று வக்கீல் ஆனார். ஆந்திர மாநிலம் கர்நூலில் உள்ள பிஷப்ஹீபர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். 1914-ம் ஆண்டில் கரோலின் அம்மையாரை திருமணம் செய்தார்.

நேசமணி அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டார். அத்துடன் 1921-ம் ஆண்டில் நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீல் தொழிலை தொடங்கினார். அப்போது கோர்ட்டில் வக்கீல்களுக்கான இருக்கைகள் ஒதுக்குவதில் சாதி பாகுபாடு இருந்ததைக் கண்டு வெகுண்டெழுந்தார். மேலும் கோர்ட்டில் வழக்குத் தொடுப்பவர்களும், நீதிமன்றத்திற்கு வெளியே நின்றுதான் தங்களுடைய சாட்சியங்களை கூறவேண்டும். அவர்கள் இடுப்பில் துணியைக் கட்டிக் கொண்டு வெளியே நிற்க வேண்டும் என்ற வழக்கமும் இருந்தது.

இதற்கு முடிவு கட்ட எண்ணிய நேசமணி, கோர்ட்டுக்குள் வக்கீல்களில் உயர்பிரிவினருக்கு என ஒதுக்கப்பட்டு இருந்த இடத்திற்குச் சென்று அமர்ந்தார். தன்னுடைய மனுதாரர்களைச் சாட்சியத்தின்போது கோர்ட்டுக்குள் அழைத்து வந்தார். இது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இவருடைய தலைமையில் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வக்கீல்களும் போராட முன் வந்தனர்.

நிலைமையை உணர்ந்த அன்றைய ஆட்சியாளர்களால் திருவிதாங்கூர் கோர்ட்டுகளில் வக்கீல்களுக்கான சாதிய முறையிலான நாற்காலிகள் அகற்றப்பட்டது. அனைத்து வக்கீல்களும் சாதி பாகுபாடு இன்றி சமமாக அமர வைக்கப்பட்டனர். வழக்குத் தொடுப்பவர்களும் தேவைப்பட்டால் கோர்ட்டுக்குள் வரலாமென ஆணை பிறந்தது.

1943-ம் ஆண்டில் நாகர்கோவில் வக்கீல் சங்கத் தலைவராக நேசமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் நாகர்கோவில் நகரசபைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1943-ம் ஆண்டு முதல் 1947-ம் ஆண்டு வரையிலான திருவிதாங்கூர் ஸ்ரீமூலம் சட்டசபை அங்கத்தினராக விளவங்கோடு- கல்குளம் தொகுதியில் இருந்து நேசமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1945-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந் தேதி சமூக நீதி போராட்டத்திற்காக திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை தொடங்கினார்.

குமரி மாவட்டம் தாய்தமிழகத்துடன் இணைய போராட்டம்

1947-ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு விடுதலை பெற்றதும் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடெங்கும் தீவிரமாகப் பரவியது. அதன் அடிப்படையில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்றைய கேரள மாநிலம் மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒரு பகுதியான தமிழ் பேசும் மக்கள் அதிகம் உள்ள இன்றைய குமரி மாவட்டப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்படவில்லை.

எனவே குமரி மாவட்ட பகுதிகளை தாய்தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று நடந்த போராட்டத்தை மார்ஷல் நேசமணி முன்னெடுத்து நடத்தினார். இதனால் போராட்டம் வீறுகொண்டு எழுந்தது. 1955-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி மாநில சீரமைப்புக்குழுவின் அறிக்கை மீது நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் உரையாற்றிய மார்ஷல் நேசமணி, திருவிதாங்கூர்- கொச்சி மாநிலத்தில் உள்ள தமிழ் பேசும் தாலுகாக்களை தாய்தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என்றார்.

இதன்காரணமாக 4 தென்தாலுகா பகுதிகளை அக்காலத்தில் தமிழகத்தின் கடைசி மாவட்டமாக இருந்த திருநெல்வேலியுடன் இணைக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் தனி மாவட்டமாக அமைக்க வேண்டும் என்று நேசமணி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். மேலும் இந்த மாவட்டத்துக்கு நேசமணி மாவட்டம் என பெயர் சூட்ட வேண்டும் என்று மக்கள் விரும்பினர். இதை விரும்பாத நேசமணி, அமைவிட பெயரான கன்னியாகுமரி பெயரிலேயே மாவட்டம் அமைய வலியுறுத்தினார். அதன் அடிப்படையில்தான் 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டம் உதயமானது. இதனால்தான் அவர் குமரி மாவட்ட சிற்பி என அழைக்கப்படுகிறார்.

சட்டசபை மற்றும் நாடாளுமன்றப் பணி

இதற்கிடையே நாடு விடுதலை பெற்றதும் 1948-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கேரள மாநில சட்டசபைக்கு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952-ம் ஆண்டு வரை அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தார். தாய்தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்தபிறகு அதாவது 1957-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் நேசமணி பிறந்த ஊரை உள்ளடக்கிய அன்றைய கிள்ளியூர் தொகுதியில் அவர் போட்டியின்றி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பிறகு 1962 மற்றும் 1967-ம் ஆண்டுகளில் நடந்த நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் 2 முறை எம்.பி.யாகவும் அவர் பதவி வகித்தார். 1-6-1968 அன்று தனது 73-வது வயதில் நேசமணி மறைந்தார். அவரது மறைவுக்குப்பிறகு நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பெருந்தலைவர் காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ஷல் நேசமணியின் தியாகத்தையும், அவர் ஆற்றிய தொண்டுகளையும் நினைவு கூர்ந்து நாகர்கோவிலில் அவருக்கு மார்பளவு வெண்கலச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement