மொடக்குறிச்சியில் 1,033 வேட்பாளர்கள்! தேர்தல் வரலாற்றில் சாதனை

Advertisement
1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் 1,033 வேட்பாளர்கள் போட்டியிட்டு தேர்தல் ஆணையத்தையே அதிர வைத்தனர்.
தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் 1996-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் அதிக அளவிலான வேட்பாளர்கள் போட்டியிட்டு தேர்தல் ஆணையத்தையே அதிர வைத்தனர். அந்த தேர்தலின்போது மொடக்குறிச்சியில் 1,005 ஆண்கள் மற்றும் 28 பெண்கள் என மொத்தம் 1,033 பேர் போட்டியிட்டு சாதனை படைத்தனர்.
Advertisement
தேர்தல் ஒத்திவைப்பு
இதன் காரணமாக மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பிற பகுதிகள் அனைத்திலும் மே 2-ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், மொடக்குறிச்சியில் ஜூன் 1-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தலை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டது. தேர்தல் சின்னங்களை ஒதுக்குதல், சின்னம் ஒதுக்குவதில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்தல் மற்றும் விரிவான வாக்குச்சீட்டுப் புத்தகத்தை அச்சிடுதல் ஆகிய பணிகளுக்காகவே இந்தத் தாமதம் அவசியமானது.
120 பக்க வாக்குச்சீட்டு புத்தகம்
இப்பணிகள் நிறைவு பெற்று 1,033 வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளடங்கிய 120 பக்கம் கொண்ட வாக்குச்சீட்டு புத்தகம் அச்சடிக்கப்பட்டு தேர்தல் நாளில், ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ஒரு வாக்குச்சீட்டு புத்தகம் கொடுக்கப்பட்டது. அதில் வாக்காளர்கள் தங்களுக்கு பிடித்த வேட்பாளர்கள் எந்த பக்கத்தில் இருக்கிறார்கள் என்பதை சிரமப்பட்டு தேடி கண்டுபிடித்து வாக்களித்தனர்.
டெபாசிட் இழந்த 1,030 பேர்
இந்த தேர்தலில் போட்டியிட்ட 1,033 வேட்பாளர்களில் 1,030 பேர் 'டெபாசிட்' இழந்தனர். 88 பேர் ஒரு வாக்கு கூட வாங்கவில்லை. 158 பேர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றனர். இந்த தேர்தலுக்கு பின்னர் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதை தவிர்க்கும் விதமாக, 'டெபாசிட்' தொகையை அதிகப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் கொண்டு வந்தது.
Advertisement






