ADMK Manifesto 2026: உழுதுண்டு வாழ்வோருக்கு அ.இ.அ.தி.மு.க.வின் 10 முக்கிய வாக்குறுதிகள்!

Advertisement
எல்லாருக்கும் எல்லாமும் என்ற அடிப்படையில் அ.இ.அ.தி.மு.க, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை தயாரித்திருக்கிறது. வேளாண் பெருமக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவிக்கப்பட்ட 10 முக்கிய வாக்குறுதிகள்!
எல்லாருக்கும் எல்லாமும் என்ற அடிப்படையில் அ.இ.அ.தி.மு.க, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை தயாரித்திருக்கிறது. இதை அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அந்தத் தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகள், பணியாளர்கள், தொழிலாளர்கள் என ஒவ்வொரு தரப்பினருக்கும் பல்வேறு அறிவிப்புகளை அ.இ.அ.தி.மு.க வெளியிட்டிருக்கிறது. அதில், வேளாண் பெருமக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவிக்கப்பட்டிருக்கும் 10 முக்கியமான வாக்குறுதிகள் என்னென்ன?
Advertisement
விவசாயிகளுக்கான அஇஅதிமுக தேர்தல் வாக்குறுதிகள்
1. நெல் உற்பத்திச் செலவைக் கணக்கில் கொண்டு விவசாயிகள் நலனுக்காக நெல்லுக்கு தற்போது வழங்கி வரும் ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.3,500 என விலை நிர்ணயம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
2. கரும்பு உற்பத்திக்கு ஆகும் செலவைக் கருத்தில் கொண்டு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 என லாபகரமான நியாயவிலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
3. நீடித்த, நிலைத்த விவசாய வளர்ச்சிக்கு உழவர் உற்பத்தியாளர் குழுக்களே வலுவான ஆதார அமைப்புகள் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் சிறு, குறு விவசாயிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, விவசாய உற்பத்தியாளர் குழுக்கள்/நிறுவனங்கள் அமைப்பதை ஊக்குவிப்பதுடன், ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் வலுவாக செயல்பட உரிய வகையில், நிதி மற்றும் பிற உதவிகள் செய்யப்படும்.
4. சிறு குறு விவசாயிகள் உரம் விதைகள் வாங்க உற்பத்தி மானியமாக ஆண்டுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.15,000 வழங்கப்படும்.
5. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள வேளாண்மை பயிர் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
6. நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்கள் கணக்கெடுப்பு நடத்தி, அவர்களுக்கு வாழ்வாதார பாதுகாப்பு அளிக்கும் விதமாக வீடு, கல்வி, வேலைவாய்ப்பு, உதவித் தொகை போன்றவை கிடைப்பதை உறுதி செய்ய சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
7. தரிசுநில மேம்பாட்டுத் திட்டம் தனி இயக்கமாக செயல்படும். அத்தகைய விவசாய நிலங்களில் விவசாயக் காடுகள் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்படும். விவசாய நிலங்களிலும் வரப்பு போன்ற பகுதிகளிலும் தீவன மரங்கள், வன மரங்கள் வளர்ப்பது ஊக்குவிக்கப்படும்.
8. விவசாயப் பணியின் போது விவசாயிகள் இடி மின்னல் தாக்கியோ, விஷ பாம்பு கடித்தோ, வனவிலங்குகள் தாக்கப்பட்டோ உயிரிழந்தால் அவர்களது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
9. புதிய விவசாய மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும், மின்கம்பங்களுக்குக் காத்திருக்காமல் அவர்கள் விரும்பினால் நேரடியாக 100% அரசு மானியத்தில் சூரிய ஒளி பம்ப் செட்டுகள் வழங்கப்படும்.
10. சிறு, குறு விவசாயிகளுக்கு அறுவடை நெல்லை பாதுகாக்க மானிய விலையில் தார்ப்பாய் வழங்கப்படும்.
Advertisement






