இரட்டை இலைக்கு ஓட்டுப்போடாதீங்க!' - எம்.ஜி.ஆர் பிரசாரம் செய்த பின்னணி தெரியுமா?
Daily Thanthi News Desk
Tamil Nadu Election 2026 Bureau

ஒரு கட்சியின் அடையாளமே, அதன் அடிநாதமே அதன் சின்னம் தான். இரட்டை இலை சின்னம் எப்படி அதிமுகவின் நிரந்தர சின்னமாக மாறியது? எம்.ஜி.ஆர் ஏன் தாராபுரத்தில் இரட்டை இலைக்கு வாக்குப் போடாதீர்கள் என்று பிரசாரம் செய்தார்?
ஒரு கட்சியின் அடையாளமே, அதன் அடிநாதமே அதன் சின்னம் தான். ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு வேட்பாளரிடமும் சின்னங்களைக் கொண்டுசேர்ப்பதில் தான், அந்தந்தக் கட்சிகளின் வெற்றி ரகசியம் அடங்கியிருக்கிறது.
இதனாலேயே ஒவ்வொரு கட்சித் தலைவரையும் நினைவுகூறும்போது அவர்கள் கட்சி சார்ந்த சின்னம் தான் நினைவுக்கு வரும்.
1977-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டபேரவைத் தேர்தலின் போது, தாராபுரம் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட முதலில் ஆர். அய்யாசாமி என்பவர் அறிவிக்கப்பட்டார். ஆனால் பின்னர் ஏற்பட்ட உட்கட்சி மாற்றங்களால் எம்.ஜி.ஆர் அந்தத் தொகுதிக்கு ஆர்.கே. பாலகிருஷ்ணன் என்பவரை வேட்பாளராக நியமித்தார்.
வேட்பாளர் மாற்றம் குறித்த குளறுபடியால் தேர்தல் ஆணையம் தாராபுரம் தொகுதிக்கான 'இரட்டை இலை' சின்னத்தை அய்யாசாமிக்கு ஒதுக்கிவிட்டது. அதிகாரப்பூர்வ வேட்பாளராக எம்.ஜி.ஆர் அறிவித்த பாலகிருஷ்ணனுக்கு 'இரட்டை இலை' சின்னம் கிடைக்கவில்லை.
Advertisement
எம்.ஜி.ஆரின் எதிர்ப்பு
இதனால் கடும் அதிருப்தி அடைந்த எம்.ஜி.ஆர், அந்தத் தொகுதியில் தனது கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்த பாலகிருஷ்ணனுக்கு (அவர் வேறு சின்னத்தில் போட்டியிட்டார்) வாக்கு சேகரித்தார். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் தவறுதலாக வேறு ஒருவருக்குச் சென்றுவிட்டதால் அந்தத் தொகுதியில் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் 'இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுப் போடாதீர்கள்' என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
எம்.ஜி.ஆரைத் தோற்கடித்த இரட்டை இலை!
ஆனால், தேர்தல் முடிவில் அதிமுக பெரும்பான்மையோடு வெற்றி பெற்றிருந்தாலும் தாராபுரம் தொகுதியில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் அலங்கியம் பாலகிருஷ்ணன் 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அய்யாசாமி அந்தத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 2,682 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
"தமிழ்நாட்டில் அதிமுக போட்டியிட்ட தொகுதிகளில் பம்பரமாகச் சுழன்று இரண்டு விரல்களைக் காட்டி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குக் கேட்ட எம்.ஜி.ஆர், தாராபுரம் தொகுதியில் மட்டும் இரட்டை இலைக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று பிரசாரம் செய்தார்."
— வரலாற்று குறிப்பு



