Daily ThanthiMaalaimalarThanthi TVDTNext
Articles
ஏப்ரல் 16, 11:00 am5 min read

மக்கள் மொழியில் அரசியல் பேசிய விஜயகாந்த்!

DT

Daily Thanthi News Desk

Tamil Nadu Election 2026 Bureau

மக்கள் மொழியில் அரசியல் பேசிய விஜயகாந்த்!

Advertisement

தமிழக அரசியல் களத்தில் கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் இருந்தபோதே துணிச்சலாக இறங்கி, விருத்தாசலத்தில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்த விஜயகாந்தின் அரசியல் பயணம்.

தமிழ்த்திரை உலகில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த விஜயகாந்த், தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றங்களை தொடங்கி மக்களுக்கு சேவை செய்தார். மேலும் 2000-வது ஆண்டிலேயே தனது ரசிகர் மன்றத்துக்கு தனிக்கொடியை உருவாக்கினார்.

2001-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த்தின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சுயேச்சையாக போட்டியிட்டு கணிசமான வெற்றியையும் பெற்றிருந்தனர். இதுவே அவரது அரசியல் வாழ்வுக்கு அடித்தளமாக அமைந்தது.

Advertisement

தே.மு.தி.க. தொடக்கம்

இருபெரும் ஆளுமைகள் இருந்த காலத்தில் துணிச்சலாக 14.9.2005 அன்று மதுரையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தி அரசியல் கட்சியை விஜயகாந்த் தொடங்கினார். தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று கட்சிக்கு பெயர் வைத்த அவர், கட்சியின் நோக்கம், கொள்கைகளை அறிவித்தார். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக வந்திருப்பதாக கூறினார்.

மக்கள் மொழியில் அரசியல் பேசிய விஜயகாந்த்தை பலரும் திரும்பி பார்த்தனர். அவரது அரசியல் பலதரப்பட்டவர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

விருத்தாசலத்தில் வெற்றி

இந்த சூழ்நிலையில் 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் தே.மு.தி.க. தனித்து 232 தொகுதிகளில் களமிறங்கியது. அதில் விஜயகாந்த் தனது சொந்த மாவட்டமான மதுரையில் போட்டியிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் விருத்தாசலத்தை விஜயகாந்த் தேர்ந்து எடுத்தார். இதற்கு காரணம் வட மாவட்டங்களில் அவருக்கு ரசிகர்கள் பலம் அதிகமாக இருந்தது.

விருத்தாசலம் தொகுதியில் தனது ரசிகர் மன்றங்களை மட்டுமே நம்பி களம்கண்ட விஜயகாந்த் 61 ஆயிரத்து 337 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் கோவிந்தசாமி 47,560 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் காசிநாதன் 35,876 வாக்குகளும், பா.ஜனதா வேட்பாளர் அரவிந்த் 1,265 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தனர்.

தே.மு.தி.க. போட்டியிட்ட முதல் தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தார். ஆனாலும் தே.மு.தி.க. கணிசமான வாக்குகளை (ஒட்டுமொத்தமாக 27 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகள்) பெற்றிருந்தது. அதாவது 8.45 சதவீத வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 100 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக தே.மு.தி.க.வின் வாக்குகளே இருந்தன.

எதிர்க்கட்சி தலைவர்

அதன்பிறகு 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் தே.மு.தி.க. தனித்தே போட்டியிட்டது. அதில் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாவிட்டாலும் கூட 10.45 சதவீத வாக்குகளைப் பெற்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது. தமிழகத்தில் மிகப்பெரிய பலம் வாய்ந்த 3-வது கட்சியாக தே.மு.தி.க வளர்ந்தது.

2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 29 தொகுதிகளில் தே.மு.தி.க. வெற்றி பெற்றது. விஜயகாந்த், ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு 91,164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. 23 இடங்களில்தான் வென்றிருந்தது. அதேசமயம் 29 இடங்களில் தே.மு.தி.க. வென்றிருந்ததால் தமிழ்நாட்டின் சட்டமன்ற பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து விஜயகாந்த்துக்கு கிடைத்தது.

வீழ்ச்சியும் மறைவும்

ஆனால் அ.தி.மு.க.-தே.மு.தி.க. உறவு நீண்டநாள் நீடிக்கவில்லை. சட்டசபையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கூட்டணி உடைந்தது. தே.மு.தி.க.வில் இருந்த 8 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. ஆதரவு நிலையை எடுத்தனர். 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை விஜயகாந்த் இழந்தார்.

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, ம.தி.மு.க.வுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட 14 இடங்களிலும் தே.மு.தி.க. தோல்வி அடைந்தது. 5.1 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது. 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் 104 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை. வாக்குகள் 2.41 சதவீதமாக குறைந்தது. அந்த தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் முதல்-அமைச்சர் வேட்பாளராக களம் கண்ட விஜயகாந்த் 34,447 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

இதனிடையே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் 28.12.2023 அன்று காலமானார்.

"2 தேர்தல்களிலும் மக்களுடனும், கடவுளுடனும்தான் கூட்டணி என பேசிய விஜயகாந்த், அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு செல்வதாக அறிவித்தார்."

Advertisement