கரூர் மாவட்டம், க.பரமத்தி பக்கமுள்ள பெரியதிருமங்கலம் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் ஜோதிமணி.
தந்தை சென்னிமலை, தாய் முத்துலட்சுமி.
வசதி வாய்ப்புகளோ இல்லாத எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். விவசாயம்தான் பிரதான தொழில்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி கணிதமும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ, எம்.பில் படிப்பையும் நிறைவு செய்தார்.
அரவக்குறிச்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த எஸ்.எஸ்.சதாசிவத்தைக் குருவாக ஏற்றுக்கொண்டு, பொதுவாழ்க்கையில் கால்பதித்தார்.
1996-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, கூடலூர் மேற்குப் பகுதி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராகத் தேர்வானார். தொடர் செயல்பாடுகளால் 2001-ல் மீண்டும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரானார். கால ஓட்டத்தின் இடையில், ப.சிதம்பரம் தொடங்கிய காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையில் கரூர் மாவட்டத் தலைவராக இருந்தார். மீண்டும் காங்கிரஸில் சிதம்பரம் இணைந்தபோது, ஜோதிமணிக்கு இளைஞர் காங்கிரஸ் கரூர் மாவட்டத் துணைத் தலைவர் பதவியை வாங்கித் தந்தார்.
2007 முதல் 2010 வரை தமிழ்நாடு தணிக்கை வாரியக்குழுவில் ஒருவராக இருந்தார். திருமணமே செய்துகொள்ளாமல் பொதுவாழ்க்கைக்காகத் தன்னை அர்ப்பணித்தவர்.
2011 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு 55,593 வாக்குகளைப் பெற்றார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்று தேர்தலைச் சந்தித்தபோது, கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஜோதிமணி 30,459 ஓட்டுகளைப் பெற்றார். இரண்டாவது முறையாக இப்போது கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராகியிருக்கிறார்.